Saturday, 28 December 2013

உண்மை உங்களை வரவேற்கிறது 2


தொலைபேசியின் ஒலி கதறிக்கொண்டே இருந்தது. மொத்தம் நாற்பது அழைப்புகள். அனைத்தையும் அவள் நிராகரித்தாள். எடுக்கப்படாத தொலைபேசி மணி ஒலிக்கும் வீட்டில், நாம் நேசிக்கிறவர்கள் இருந்தால்... அவர்கள் மேல் மோதிய ஒலி, நம்மை வந்தடைந்து அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதை சொல்லிவிடுகிறது.

யார் முக்கியம் என்ற என் கேள்விக்கு, அவள் தன் தோழிகள்தான் என்பதை செயலால் சொல்லிவிட்டாள். நான் இந்த கேள்வியை முன் வைக்கவில்லையென்றால் எங்கள் உறவுக்கு உத்திரவாதம் இருந்திருக்கும். அந்த உத்திரவாதம் பொய்யானதாகவே இருந்திருக்கும். எல்லோரும் தேவையானவர்களுக்கு, யாரும் தேவையில்லை என்பதே உண்மை.

உண்மையை நோக்கி காதலியை அழைத்துச் சென்றதால், நான் தோற்றேன். அவள் ஜெயித்தாள். காதல் இறந்து போனது.

நான் புகைப்படம் எடுப்பதை நிறுத்தினேன். குடித்துவிட்டு ரோடுகளில் கிடந்தேன். அதை அவள் தோழிகள் பார்த்து சிரித்துவிட்டு போனார்கள்.

என் நண்பன் ஷாஜி தலையில் அடித்துக் கொண்டான். "நீ ஏஜென்சி பக்கமே போகல. உன் வேலை போயாச்சி. மதறாஸ்லயிருந்து வந்து இங்க பிச்சை எடுக்கப் போறியா?"

நான் அமைதியாக இருந்தேன். அவனுக்கு கோபம் இன்னும் அதிகமானது. பிறகு அதுவே என் மீது அன்பாக மாறியது. தாழ்ந்த குரலில் சொன்னான். "நீ தெருவுல கிடந்ததை உன் காதலி பார்த்திருக்கிறாள். நீ அழிந்து போவதைப் பற்றி, அவள் துளி கூட கவலைப்படவில்லை. இனியும் நீ உன்னை அழித்துக் கொள்ள விரும்புறியா?"

எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது.

மதுபானக் கூடத்தில் 'நூறு ஆண்டுகளுக்கு முன்பே உன் மீது எனக்கு காதல்...' என்ற பாடல் ஹிந்தியில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு பெண் ஆடிக்கொண்டிருந்தாள். நான் குடித்துக் கொண்டிருந்தேன். அவள் நடனம் ஆடிக் கொண்டே அடிக்கடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தெரியும். அவள் நடிகையாவதற்காக பாம்பே வந்தவள். நான் எடுத்த புகைப்படங்கள் அவளை நடிகையாக்கியிருந்தது. ஏனோ தெரியவில்லை அவள் சினிமாவில் ஜொலிக்கவில்லை. மதுபானக் கூடத்தில் ஆடிக்கொண்டிருந்தாள்.

என் அருகே வந்த அவள், மெதுவாகச் சொன்னாள். "நீ தெருவில் கிடப்பதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அது நீதான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு விலை உயர்ந்த கேமரா தெருவில் கிடப்பதாகவே நான் நம்புகிறேன்."

நான் அவளை ஒரு வினாடி கூர்ந்து பார்த்தேன். அவள் கண்களில் உண்மை இருந்தது. எதுவும் சொல்லாமல் எழுந்தேன். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அன்றைய இரவு, நான் ஒரு கனவு கண்டேன். அதில் நானும் என் காதலியும் பைக்கில் சென்றுகொண்டிருந்தோம். கொஞ்ச தூரத்தில் 'உண்மை உங்களை வரவேற்கிறது' என்ற எல்லைக் கல்லைப் பார்த்தோம்.
அவள் வேகம் வேகமாக வண்டியை நிறுத்தச் சொன்னாள். நான் நிறுத்தவில்லை., அவள் குதித்தாள்.

நான் பதறிப் போய் பிரேக் அடித்தேன். பைக் அரை வட்டம் போட்டு நின்றது. அவளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதட்டத்தில் சுற்றிலும் பார்த்தேன்.

அவளை எங்கேயும் காணவில்லை. மறைந்து போயிருந்தாள்.

திரும்பிப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஆனால்... மனது எல்லையைக் கடக்க சொல்லிற்று. பைக்கை வேகமாக செலுத்தினேன். நான் எல்லையைத் தாண்டி நுழைந்த வினாடி... என் மீது அளவிடவே முடியாத வெளிச்சம் பாய்ந்தது. அங்கே பாதையும் இல்லை., பயணமும் இல்லை. எதுவுமற்ற நிலையே நிலைத்திருந்தது. என் நொறுங்கிப் போன மனம் மீண்டும் ஒன்றாக இணைந்து கொண்டது. அதில் பதிவாகியிருந்த கவலை, துக்கம், சந்தோஷம், காதல் எல்லாமும் அழிந்து போயிற்று.

மறுநாள் காலை. என் கேமராவை எடுத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க கிளம்பினேன். தெருவில் கிடந்த கேமராவை யாரோ ஒருவரின் வார்த்தை காப்பாற்றியிருக்கிறது. முக்கியமானவர்களுக்காக முக்கியமில்லாதவர்கள் கைவிடப்படுவார்கள். இவ்வளவுதான் உறவின் தத்துவம்.

எதிர் திசைகளில் பயணிக்கும் இரண்டு ஆன்மாக்கள் ஒருபோதும் இணைவதில்லை. இந்த இருபத்திமூன்று ஆண்டுகளில் நாங்கள் சந்திக்கவே இல்லை. யார் எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. உண்மையானவர்கள் உங்களை எல்லை நோக்கி அழைத்துச் செல்லும்படி வைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் உங்கள் கூடவே வருவார்கள். அவர்களுக்கு உண்மையைப் பார்த்து பயமில்லை.

என்றாலும்... யாரையும் எல்லை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். அதற்கு அப்பால் உண்மை இருக்கிறது. உண்மை ஆபத்தானது., பொய் பாதுகாப்பானது.

Sunday, 22 December 2013

உண்மை உங்களை வரவேற்கிறது 1


யாரையும் எல்லையை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். அதற்கு அப்பால் உண்மை இருக்கிறது. உண்மை ஆபத்தானது.

உங்களுக்கு சிறந்த நண்பன் இருக்கலாம்., காதலி இருக்கலாம்., மனைவி இருக்கலாம்., பெற்றோர் இருக்கலாம்., குழந்தைகள் இருக்கலாம். யாராக இருந்தாலும் எல்லையை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். நீங்கள் உண்மையானவர் என்றால்... நொறுங்கிப் போவீர்கள்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பேயில் எனக்கொரு காதலி இருந்தாள். அவள் அழகானவள்., அமைதியானவள்., ஏன் உண்மையானவளும் கூட.

ஒரு மாலையில் நான் அவளைப் பார்ப்பதற்காக சர்ச் கேட் போய் இறங்கினேன். அப்போது சில பெண்கள் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்களை நான் புகைப்படம் எடுக்கச் சென்ற பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களைக் குறித்து எனக்கு எந்த மரியாதையும் இல்லை. அதற்குப் பல மோசமான காரணங்கள் இருந்தது.

"அவர்களோடு உனக்கு நட்பு வேண்டாம்." என்றேன் என் காதலியிடம்.

அதற்கு அவள் ஏதேதோ கருத்துக்களையும், காரணங்களையும் சொன்னாள்.

கடைசியாக அவர்கள் நட்பைத் துண்டிக்க கால அவகாசம் கேட்டாள். நான் குழப்பமடைந்த இடம் இங்குதான். அவளுக்கு யார் முக்கியம்? என்ற கேள்வி தோன்றியது.

நாட்கள் நகர்ந்தது.

மட்டுங்கா ரயில் நிலையம் - என் காதலியோடு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மீண்டும் பார்த்தேன். என் காதலிக்கு யார் முக்கியம்?

"உனக்கு யார் முக்கியம்? நானா? உன் தோழிகளா?" என்று கேட்டேன்.

"நீங்கள்தான்." என்றாள்.

"அப்படியென்றால் அவர்கள் நட்பை விட்டு விடு."

"எனக்கு அவகாசம் வேண்டும்." இரண்டாவது முறையாக கேட்டாள். சில நேரங்களில்... ஒரு வினாடியில் எடுக்கப்படாத முடிவு, எப்போதுமே முடிவடையாது.

சொல்லாலும் செயலாலும் பின்னப்பட்டது வாழ்க்கை. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது உண்மை. சொல் வேறும், செயல் வேறுமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் அவளை எல்லைக்கு அப்பால் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

தினமும் அவளிடம் "உன் தோழிகளை விட்டு எப்போது விலகுவாய்?" என்று கேட்க ஆரம்பித்தேன். தினம் ஒரு சண்டை. சண்டைக்கு நடுவே அவளை மெதுவாக எல்லையை நோக்கி அழைத்துச் சென்றேன்.

அவள் பாதி வழியில் நின்றுகொண்டாள். அதற்கு மேல் வரவில்லை. என்னோடு பேசுவதை குறைத்துக் கொண்டாள்.

எனக்கு புரிந்து போயிற்று. முக்கியமானது இருக்கும்., முக்கியமில்லாதது காணாமல் போகும். இங்கே காணாமல் போகப் போவது நானா? அவள் தோழிகளா?

ஒரு நடுப் பகலில் கடைசி சண்டை நிகழ்ந்தது. மறுநாள் அவள் வீட்டில்தான் இருந்தாள் என்பதை நான் அறிவேன். தொலைபேசியில் அழைத்தேன். அவள் எடுக்கவில்லை. இனி என் அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று உள் மனம் சொல்லிற்று.

ஆனாலும்... கடைசியாக அந்த பொய்யான குரலைக் கேட்க விரும்பினேன். என் அழைப்பு அவள் வீட்டு தொலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்தது...

அடுத்த வாரம்...

Saturday, 23 November 2013

திரும்பாத இரவுகள்


முன் கதவு திறந்திருக்கிறது
பின் கதவை பயன்படுத்த வேண்டாம்.

நண்பர்கள் போல
திருடர்கள் வருவதை
அனுமதிக்க முடியாது.

பிச்சைக்காரர்களுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும்
மேஜை மீது உணவிருக்கிறது.

மது அருந்துபவர்களுக்கு
குவளையில் சாராயமும்
இரண்டு கோப்பைகளும் இருக்கின்றன.

இளைப்பாற கட்டிலும் மெத்தையும்
மூலையில் கிடக்கின்றன.

சுவரிலிருக்கும் மனிதனை
இகழாதவரை
உறவுக்கு உத்திரவாதமுண்டு.

இரத்தக் கறை படிந்த புன்னகையை
மறக்காமல் எடுத்துக் கொண்டு
இரவு வருவதற்கு முன்
விடை பெறுங்கள்.

வீட்டைப் பூட்ட வேண்டும்.
                               - ஸ்நேகிதன்

Sunday, 17 November 2013

பார்வைகள்




அவனால் என்னை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. தலை குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களுக்கு நடுவே இரண்டு யூஸ் அண்ட் த்ரோ கப்புகளில் மது நிறைந்திருந்தது.

அவனுக்கும் குடிக்க மனதில்லை., எனக்கும். எதை வைத்து அவன் அப்படிச் சொன்னான் என்று என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. நான் என்னை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடலாம். ஆனால்... சமூகமும் அப்படியே மதிப்பிட வேண்டிய காட்டாமில்லை. அது வேறு மாதிரியான மதிப்பீட்டை வைத்திருக்கும்.

பல நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் இந்த சமூகம் மதிப்பீடு செய்துகொள்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால்... இந்த சமூகத்திற்காக நாம் சிறந்த நடிகர்களாக மாறியாக வேண்டும்.

நான் யூஸ் அண்ட் த்ரோ கப்பிலிருந்த மதுவை காலி செய்தேன். அவனுக்கு இன்னும் என்னை நேருக்கு நேர் பார்க்கும் துணிவு வரவில்லை. மூன்று நிமிடங்களுக்கு முன், "நீ ஒரு காரியவாதி." என்று அவன் என்னை பார்த்துச் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதுக்குள் மோதிக்கொண்டே இருந்தது. நீண்ட ஆண்டுகள் பழகிய நண்பனே இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னான் என்றால்... இந்த சமூகம்?

"என்னப் பாரு." என்றேன்.

சில வினாடிகள் அவன் என்னைப் பார்க்கத் துணியவில்லை. பிறகு மெதுவாக தடுமாறும் கண்களோடு பார்த்தான்.

"உனக்குத் தெரியும் நான் அமைதியான ஆள் இல்லன்னு. அடுத்தவன் பிரச்சனைக்கு போயிப் போயியே என் வாழ்க்கய தொலைச்சிட்டேன். இப்ப காலம் அமைதியா இருக்க கத்துக் குடுத்துருக்கு. அமைதியா இருக்கிறேன். அமைதியா இருக்றவன் காரியவாதின்னா... அப்படியே இருந்துட்டு போட்டும்."

அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. மீண்டும் குனிந்து கொண்டான்.

"எங்கிட்ட பொண்டாட்டி இல்ல, குழந்தை இல்ல, சொந்த வீடு இல்ல, கார் இல்ல, பேங்ல பணமில்ல, ஏன்? சொல்லிக்ற மாதிரி வேலை கூட இல்ல. இதெல்லாம் வச்சிருக்ற நீ காரியவாதியா? நான் காரியவாதியா?" என்று கேட்டேன்.

அவன் அதற்கும் அமைதியாக இருந்தான். அமைதியை சிலர் இயல்பாக வைத்திருப்பார்கள். அவன் பதில் சொல்ல முடியாததால் வைத்திருந்தான். அடுத்த வினாடியே, அந்த இடத்தை விட்டு போகவேண்டும் போலிருந்தது. எனக்காக காத்திருந்த மதுக் கப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

நடு இரவில் சென்னையின் தெரு அமைதியாக இருந்தது.

குடும்பத்திற்காக குடும்பத்திலிருந்து பிறக்கிறது குற்றம். அதில்தான் இந்த சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மாறி நிற்பவன் துணிச்சலானவன். துணிவில்லாதவர்களால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கப்பை காலி செய்து கசக்கி தூக்கியெறிந்தேன். யூஸ் அண்ட் த்ரோ கப் போய் மண்ணில் விழுந்தது.

Saturday, 9 November 2013

அதிக நேரமில்லை


பாம்பே - அது 1993 ஆம் ஆண்டு முதல் மாதத்தின், கடைசி நாளின் நடு இரவாக இருந்தது.

நான் அறைக்குள் நுழைந்த நேரம், அவள் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். மங்கிய வெளிச்சத்தில் நாற்பத்தைந்து வயதுதானிருக்கும் என்று தோன்றியது. மேல்தட்டு வர்க்கத்தின் அழகு அவளிடம் இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக அவள் தூங்கவில்லையென்பது அந்த வெண்ணிற முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அந்த அறையின் நிசப்தம் அவளை நிலை குலையச் செய்திருந்தது.

என் முகத்தை ஒரே ஒரு முறை நேருக்கு நேராக பார்த்தாள். பிறகு சுவரை பார்க்கத் துவங்கினாள். நான் மேஜை மேலிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்தேன் - அதிர்ச்சியானேன். ஆனால்... வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உணர்வுகளை வெளியே காட்டக் கூடாது என்பதுதான் எங்கள் முக்கியமான பாடம். அவள் தோற்றத்திற்கும், செய்த செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமலிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் அவளைப் பற்றிய தகவலை எண்களாக சிலேட்டில் எழுதினேன்.

அவளை சுவர் ஓரமாக, அளவு கோல் வரையப்பட்டிருந்த இடத்தில் வந்து நிற்கச் சொன்னேன். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கூட அவளிடமில்லை. அமைதியாக வந்து நின்றாள். சிலேட்டை அவளிடம் நீட்ட, எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். ஆனால்... அவள் கண்களில் 'இது எதற்கு?' என்ற கேள்வி தோன்றியது. ஆனால்... கேட்கவில்லை.

நான் அவளை மூன்று புகைப்படங்கள் எடுத்தேன். அந்த நடு இரவில் என் கேமராவின் ஷட்டர் சத்தமும், வெளிச்சம் சிதறி பிளாஷ் சக்தியை உருஞ்சும் சத்தமும் துல்லியமாக கேட்டது. அவள் எந்த உணர்ச்சியையும் கேமராவுக்கு காட்டவில்லை. ஆனால்... அவள் மௌனம், அந்த இரவை துன்புறுத்துவதாக இருந்தது.

அவள் உடலும், மனமும் தளர்ச்சியாக இருந்ததால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.

வாசலில் ஏதோ அசைவு தெரிந்தது. நான் திரும்பிப் பார்க்க, கோக்டே நின்று கொண்டிருந்தார். "டைம் நகி ஹே. ஓஹயா க்யா?"

நான் ஆமாம் என்று தலையசைத்தேன். அவர் அவளை கட்டளையோடு கையசைத்து அழைத்தார். அவள் இப்போதும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் எழுந்தாள்., போகும் போது என் தலை முடியை கோதிவிட்டபடி, ஒரு கடினமான புன்னகையை தந்துவிட்டு போனாள்.

எனக்கு பட்டென்று என் அம்மாவின் ஞாபகம் வந்தது.

நான் ஃபைலில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அன்டாப் ஹில் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். இரண்டு காவலர்கள் ஒருவனை அடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனார்கள்.

அவள் முகம் என் மனதைவிட்டு விலகாமல் கூடவே வந்துகொண்டிருந்தது. அவள் தன் கணவனை ஆறு இடங்களில் கொடூரமாக குத்திக் கொன்றாள் என்று முதல் தகவல் அறிக்கை சொல்லியது. முதல் குத்தில், கத்தி விலா எலும்பின் இடிவெளியில் நுழைந்து, இதயத்தை துளைத்திருக்கிறது. மரணம் அந்த நிமிடமே நிகழ்ந்திருக்கலாம். பிறகு அவள், ஐந்து இடங்களில் பிணத்தைக் குத்தியிருக்கிறாள். அது சாதாரண கத்தியால் செய்ய முடியாது என்ற அனுமானங்கள் இருந்தது. ஏழாவது மாடியிலிருந்து கத்தியை வீசியிருக்கிறாள். அது இன்னும் கிடைக்கவில்லை. விலா எலும்பைக் கடந்து சாதாரணமாக கத்தி உள்ளே நுழைந்து விடாது. மட்டுமல்லாமல் ஒரு பெண்ணால் அது சாத்தியமா? இங்கே எப்படி நடந்தது? கணவனின் கொடூரம் அவளை கொடூரமாக மாற்றியிருக்கலாம். எப்படியோ... இன்று இரவு நடக்கப் போகும் விசாரணையில் எல்லா உண்மைகளும் தெரிய வரும். ஆனால்... உண்மைதான் வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.

அவள் முகத்தை நான் என் கேமராவில் பத்திரமாக எடுத்து வந்துகொண்டிருந்தேன். நாளை அவளை சந்திக்கும் போது, என் கேமராவிலிருக்கும் முகத்தைப் போல, அவள் முகம் இருக்காது என்பது எனக்குத் தெரியும். அது எனக்கு ஒருவித துக்கத்தை ஏற்படுத்தியது. நான் நிறைய குற்றவாளிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்படி ஒரு துக்கத்தை தந்துவிட்டு போனதில்லை. என்னிடம் அவள் ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அவள் என் கேசத்தை கோதிச் சென்ற ஸ்பரிசத்தை நான் இன்னும் சுமந்துகொண்டிருக்கிறேன்.

Saturday, 2 November 2013

ஏன் அப்படிச் செய்தாய்?

தினேஷ் குமார்
எப்படி சிரிக்கிறான் என்று பாருங்கள். இவன் பெயர் தினேஷ் குமார். நாகர்கோவில் நகரத்தில் இவனை நீங்கள் எங்காவது பார்க்க நேரலாம். எனக்குத் தெரிந்து, இவன் சுற்றித் திரியும் இடங்களைச் சொல்கிறேன். அது உங்களுக்கு உதவக் கூடும்.

செட்டிகுளம் ஜங்ஷன், வேப்ப மூடு ஜங்ஷன், மணிமேடை ஜங்ஷன். இந்த மூன்று இடங்களில், அனேகமாக நீங்கள் இவனைப் பார்க்கலாம். அப்படி பார்க்க நேர்ந்தால்... ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க வேண்டும். அந்தக் கேள்வி உங்களுக்கு கடினமாக இருக்காது என்றே நம்புகிறேன். அந்தக் கேள்வியைக் கேட்க நீங்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால்... இவன் என் குழந்தை பருவத்து நண்பன்.

'ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்க வேண்டும். எளிமையாகத்தானே இருக்கிறது?

இந்தக் கேள்வியை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால்... எனக்கு சரியான பதிலை இவன் தரவில்லை. உங்களுக்காவது தருகிறானா என்று பார்ப்போம்.

நாகர்கோவில். 1989 ல் ஏதோ ஒரு மாதம். அது எங்கள் இளமைக் காலம். இவன் அக்காவின் மாமனாருக்கு மாரடைப்பு. ஒரு பிரபல மருத்துவ மனையில் வைத்திருந்தார்கள். இவன் அங்கேயே தவமிருக்க, நானும் உடனிருந்தேன். அப்போதுதான் நான் அந்த தேவதையைப் பார்த்தேன். தேவதைகள் கருப்பாகவும் இருப்பார்கள் என்று அப்போதுதான் தெரிந்தது. வெண்ணிற உடையில் நர்சாக வந்துகொண்டிருந்தாள். முதல் பார்வையிலேயே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. என் அருகில் வந்தவள் ஒரு புன்னகையை வீசிவிட்டுப் போனாள். எனக்கு காய்சல் வந்துவிட்டது.

பிறகு வந்த நாட்களில் காதல் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்க ஆரம்பித்தது. பத்து நாட்களில், நாங்கள் பத்து வார்த்தைகள்தான் பேசியிருப்போம். நான் பாம்பே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், காதலைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது . மறுநாள் அவளிடம் என் காதலைச் சொல்ல காத்திருந்தேன்.

அவள் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது, அன்று அவளுக்கு விடுமுறை என்று. நான் சுமந்துகொண்டிருந்த வார்த்தைகளை என்ன செய்ய? ஒரு காகிதத்தில் எழுதி, கடிதமாக தினேஷ் குமாரிடம் குடுத்தேன். 'அவளிடம் எப்படியும் கொடுத்துவிடு' என்றேன்.

இவன் நம்பிக்கையாக 'குடுத்துவிடுவேன்' என்றான். அன்றே நான் பாம்பே புறப்பட்டேன். அங்கே ஒவ்வொரு நாளும் அவளிடமிருந்து கடிதம் வரும் வரும் என்று காத்திருந்தேன். வரவேயில்லை. நாட்கள் செல்லச் செல்ல என் காதலும் மங்கிப் போனது.

2009 ம் ஆண்டு. ஒரு சாயங்காலத்தில் நானும் இவனும், நாகர்கோவில் நேதாஜி ஸ்டோருக்கு முன்னால் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவளை மீண்டும் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது. அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கடந்து போனாள். முகத்தில் கொஞ்சம் கவலை படிந்திருந்தது. கழுத்தில் தாலி. தாலி கட்டிய தேவதையை பின் தொடர விரும்பாமல் நான் அப்படியே பார்த்தபடி இவனிடம் சொன்னேன். 'அவள் என் கடிதத்திற்கு பதில் எழுதியிருந்தால்... அவள் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். என் வாழ்க்கையும்தான்.'

அதற்கு இவன் சாதாரணமாக 'நான் அந்த லெட்டர அவள்ட குடுக்கவே இல்லியே.' என்றான்.

நான் அதிர்ச்சியில் இவனையே பார்த்தேன்.

'அந்த லெட்டர் இன்னும் எங்கிட்ட பத்திரமா இருக்கு' என்றான்.

'நீ ஏன் அப்படி செய்தாய்?' என்று கேட்டேன்.

அதற்கு இவன் வரலாற்றில் யாருமே சொல்ல முடியாத ஒரு பதிலைச் சொன்னான். 'வா, டீ குடிக்கப் போலாம்.'

இன்னொருவனின் படிக்கப்படாத காதல் கடிதத்தை, இருபது வருடங்களாக பத்திரப்படுத்தி வைத்திருப்பவனை என்ன செய்வது? இப்போது கூட நான் அதிர்ச்சி மாறாமல்தான் இருக்கிறேன். நீங்கள் இவனை எங்காவது பார்த்தால் 'ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டுச் சொல்லுங்கள்.

Saturday, 26 October 2013

மொழியறியாத வீடு


குழந்தைகளிருக்கும் வீட்டில்
பொம்மைகளும் வசிக்கத் துவங்கிவிடுகின்றன.

கைவிடுதலும்
புறந்தள்ளுதலும்
புகார் சொல்லுதலும்
பொம்மைகளிடம் இல்லை.

பேசுபவர்களோடு ஒருபோதும்
பேசுவதில்லை பொம்மைகள்.

பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள்
பொம்மைகள் என்ன பேசிக்கொள்ளும்
என்பதை அறியாமலேயே
கதவு திறக்கப்படுகிறது.

மௌனத்தின் மொழியறியாத வீடு
வார்த்தைகளால் மூழ்கிக் கிடக்கிறது.

குழந்தைகளின் அழுகையை
நிறுத்தும் பொம்மைகள்
தன் அழுகையை
மௌனத்தில் மறைத்துக் கொள்கிறது.

குழந்தைகளின் மாற்றம்
குப்பைத் தொட்டியை
பொம்மைகளின் வீடாக மாற்றுகிறது.

பொம்மைகள் அறிவதில்லை
தன் வாழ்நாளை.

குழந்தைகளின் மனதில்
மறைந்திருக்கிறது
பொம்மைகளின் ஆயுள்.
- ஸ்நேகிதன்

Saturday, 19 October 2013

புதிதாக பிறக்கலாம்

குணா
நான் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்குள் நுழைந்த நேரம், நண்பர் குணா யாரிடமோ செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அது மிகவும் முக்கியமான உரையாடல் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. என்னிடம் கையசைத்து காத்திருக்குமாறு சொன்னார்.

நான் அமைதியாக உட்கார்ந்தேன்.

அவர் செல்ஃபோனில் சொன்னார். நீ ஒரு காரியம் செய். நேராக ஒரு துணிக் கடைக்குப் போ. அங்க ஒரு காவி வேட்டியும், சட்டையும் வாங்கிக்க. அதை அங்கயே மாத்திட்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போ. அங்க வடநாட்டுக்கு என்ன டிரையின் போகுதோ... அதுல ஏறி உட்கார்.

நான் ஒன்றும் புரியாமல் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்.

“டிரையின் போகப் போக நீ வாழ்ந்த வாழ்க்கையும், இனி எப்படி வாழப் போறோம்ங்ற கேள்வியும் உன்னை சுத்தியே வரும். நீ உன்னோட செல்ஃபோனை தூக்கி வெளிய எறி.

எனக்கு குணாவின் உரையாடல் புரியாவிட்டாலும், ஒரே வினாடியில் சுவாரசியமானது. கவனித்தேன்.

“அப்புறம்... உன்னிடம் இருக்ற பணத்தையெல்லாம் எடு. அதையும் வெளிய வீசியெறி. எப்போ உங்கிட்ட பணமில்லையோ, அப்பவே நீ செத்துப் போயிட்ட.

நான் குணாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் லேசாக புன்னகைத்தார். ஆனாலும்... அவர் பேச்சில் ஒரு ஆழமான கவனம் இருந்தது. நான் அவசரமாக செல்ல வேண்டும். ஆனாலும்.. அவர் பேச்சின் சுவாரசியத்தில் அப்படியே இருந்தேன்.

“டிரையின் கடைசியா எந்த ஊர்ல நிக்குதோ, அங்க இறங்கு. உன்கிட்ட பணமில்ல, மாத்து துணி இல்ல, படுக்க இடமில்ல, சொந்தம் இல்ல, நண்பர்கள் இல்ல. அங்கயே அலைஞ்சி திரி. அப்போ உனக்கு மனுஷங்க யார்னு தெரியும். நீ யார்னு புரியும். ஒரு வருஷம் கழிச்சி இங்க வா. அப்போ நீ ஒரு சரியான வாழ்க்கைய வாழலாம். அது உன்னோட ரெண்டாவது பிறப்பு. அந்த வாழ்க்கை உனக்கு புதுசா இருக்கும். என்னைத் தேடி ஒரு நண்பர் வந்திருக்றார். அவரை அனுப்பிட்டு கூப்பிடுறேன். அதுவரை எதுவும் செய்யாத. காத்திரு.என்று தற்காலிகமாக பேச்சை முடித்துவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தார்.

இருவரும் டீக் கடைக்கு வந்தோம். டீயைக் குடித்துக் கொண்டே “என் திரைப்படத்திற்கான தலைப்பை ஒருவன் திருடி ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறான். அவனிடமிருந்து அதை எப்படி வாங்குவது. என்று கேட்டேன். அவர் சில விஷயங்களைச் சொன்னார். ஆனால்.. அவர் கவனம் என்னிடம் இல்லை. அவர் பார்வை அடிக்கடி செல்ஃபோனுக்கு சென்று கொண்டிருந்தது.

“எதாவது சிக்கலா?என்று கேட்டேன். அவர் “இல்லை.என்று துவங்கி, இருந்ததை லேசான புன்னகைக் கலந்து சொன்னார். எனக்கு பகீர் என்று இருந்தது. நான் வேகமாக விடை பெற்றுக் கொண்டேன்.

அவர் வேகமாக செல்ஃபோனை காதில் வைத்தபடி போனார்.

நான் சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன். ரோட்டைப் பார்த்தேன். உயிர் வாழ்வதற்காக எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்... குணாவின் நண்பன் தற்கொலை செய்வதற்காக காத்திருக்கிறான்.

இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் அவன், கடைசியாக குணாவிடம் பேசிவிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்றிருந்திருக்கிறான். அப்போதுதான் நான் உள்ளே நுழைந்திருக்கிறேன். குணா அவன் மனதை எப்படியும் மாற்றிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. சினிமா அதை அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தது. ஆனால்... வாழ்க்கை சினிமா அல்ல.

தற்கொலை செய்வதை விட, புதிதாக பிறப்பது அழகானது. ஆனால்... கடினமானது. அந்த நண்பன் புதிதாக பிறக்க சம்மதித்தானா என்று இனிதான் குணாவிடம் கேட்க வேண்டும்.

Sunday, 13 October 2013

தொலைந்த வார்த்தைகள்


வார்த்தையை நாம் தொலைக்கும் போது, அதன் தத்துவத்தை, கருத்தை, நம்பிக்கையையும் சேர்த்துத்தான் தொலைக்கிறோம்.

ஒரு வார்த்தை அதன் அழகை பொருளில் வைத்திருக்கிறது. ஒரு பெண் தன்னை வைத்திருப்பது போல. தத்துவம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு... ‘பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தே தத்துவம்.‘ இதுவே பதில்.

தத்துவம் தோற்கும் போது, வார்த்தை தொலைந்து போகிறது. ‘நல்லவன் வாழ்வான்.‘ என்ற ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வந்தது. இப்போது அந்த தத்துவம் நம்பிக்கையை இழந்துவிட்டது. அதனால்... நல்லவன் என்ற வார்த்தை தொலைந்துவிட்டது.

ஒரு வார்த்தையில்லாமல் அந்த தத்துவம் தவிக்க, அந்த இடத்தை கெட்டவன் என்ற வார்த்தை ஆக்ரமித்துக் கொண்டது. ‘கெட்டவன் வாழ்வான்.‘ இதுதான் புதிய தத்துவம்.

மனிதர்களின் சூழல் மாறும் போது, வாழ்வு மாறுகிறது. அதோடு வார்த்தையும் மாறிவிடுகிறது. ஆதியில் பத்திரம் எழுதும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இடம் உனக்கு. பத்து பணம் தா.என்று விற்பனை நடந்திருக்கும்.

கொடுக்க வேண்டியவன், பணத்தை தந்துவிட்டேன் என்று வார்த்தையை மாற்றியிருப்பான். அதனால்... சாட்சி என்று ஒருவரை உருவாக்கியிருப்பார்கள். பிறகு... வார்த்தை கொடுத்தவனும் சாட்சியும் சேர்ந்து வார்த்தையை மாற்றியிருப்பார்கள்.

இனி... மனிதர்களின் வாய் வார்த்தையை நம்புவதற்கில்லை என்ற முடிவில், வார்த்தையை எழுத்துப் பூர்வமாக்கி, காகிதத்தில் எழுதியிருப்பார்கள். முடிவில் மனிதனின் வார்த்தையை விட, எழுத்து நம்பிக்கையை பெற்றுவிட்டது. இது மனிதனுக்கு அவமானமான ஒன்று என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எப்படியாக இருந்தாலும், வார்த்தை தொலையும் போது வாழ்க்கை தன் முகத்தை மாற்றிக்கொள்கிறது.

உயிர் வாழ்வதற்காக வாக்கை கைவிடும் மனிதன், தன் வார்த்தையை தொலைத்துவிடுகிறான். மனிதன் மட்டுமல்ல ஒரு அரசாங்கம், நிறுவனம், அமைப்பு, மதம், கட்சிகள் எல்லாமும் இதைச் செய்கின்றன.

‘பூஷ்வா‘ என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளால் உச்சரிக்கப்பட்டு வந்தது. அது இப்போது தொலைந்துவிட்டது. ஒருவேளை நாம் எல்லோருமே பூஷ்வாவாக மாறிவிட்டதால் அந்த வார்த்தை தொலைந்துவிட்டதோ என்னவோ.

அம்மா, மம்மியாக மாறியதில் அம்மாக்களுக்கு சந்தோஷம்தான். பீட்சா சாப்பிடாத மம்மி எப்படி மம்மியாக முடியும்?  அம்மா என்ற ஒரு வார்த்தை நம் மனதில் எத்தனையோ உணர்வுகளைத் தருகிறது.

அன்பு, தியாகம், பாசம், ப்ரியம், ஸ்பரிசம், தேடல், மரியாதை, முத்தம் இப்படி எல்லா வார்த்தைகளையும், அதன் பொருளையும் நாம் அம்மாவிடமிருந்தே அறிந்தோம். அம்மா என்ற வார்த்தை தொலையும் போது, அதன் பொருளும் தொலையும். அதை மம்மி என்ற வார்த்தை எப்படி மீட்டெடுக்கும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அதில் நம் கலாச்சாரம் இருக்குமா? இந்த கேள்விகளுக்கு பதில் என்னவென்று தெரியவில்லை.

மக்கள் தொகையை குறைக்க நினைத்த அரசு ‘சிறு குடும்பம் போதுமே‘ என்று பிரச்சாரம் பண்ணியது. பிறகு ‘நாம் இருவர். நமக்கு இருவர்‘ என்றது. இப்போது ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்.‘ என்று சொல்கிறது. இனி... என்ன சொல்லும்?

‘உனக்கு நானும், எனக்கு நீயும் குழந்தைகள். அதனால் குழந்தை வேண்டாம்.என்று சொல்லுமா?

ஒரு கருத்தை உருவாக்கும் போது, அது எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழும் என்ற தொலைநோக்கு சிந்தனை வேண்டாமா? பணத்திற்காக மட்டுமே வேலை செய்பவர்களால் உண்மையாக சிந்திக்க முடியாதுதான்.

நாம் எவ்வளவோ வார்த்தைகளைத் தொலைத்துவிட்டோம். இப்போது நாம் தொலைக்கக் கூடாத ஆங்கில வார்த்தை ஒன்று இருக்கிறது. ஆனால்... அது தொலைந்துகொண்டிருக்கிறது. அந்த வார்த்தை Made in India.                   

Sunday, 6 October 2013

காந்தியின் புன்னகை


அது நடு இரவாக இருந்தது. பாருக்குள் குடித்து, தெருவில் குடித்து, கடைசியாக ஒரு மரத்தடியில் குடித்து முடித்த பிறகுதான்... அந்த இரவு நலமாக தோன்றியது.

நண்பர்கள் எல்லோரும் விடை பெற தயாராகும் போது... அந்த இரவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் எப்படியும் கீழே விழுந்து சாமி கும்பிடுவான் என்று குமார் சொன்னான்.

எல்லோரும் திரும்பிப் பார்த்தோம். அவர் அறுபது வயதைத் தொட்ட மனிதராக இருப்பார் என்று தோன்றியது. இன்னும் சில நிமிடத்தில் கீழே விழுவார் என்று உறுதியாக தெரிந்தது., அவ்வளவு போதை.

கீழே விழுந்தால் பரவாயில்லை. அவர் ஓட்டி வந்த புல்லட் அவர் மீது விழுந்தால்... நிச்சயமாக அவர் அவ்வளவுதான். எல்லோரும் ஓடிப்போய் பைக்கைப் பிடித்தோம். அவர் கீழே சரிந்தார்.

மாலையில் அழகாக உடுத்தி வந்த மல்லிகைப் பூ வேட்டியும், சட்டையும் அழுக்கானது. புல்லட்டை ஸ்டேன்டில் நிறுத்தினேன். இனி இவரை என்ன செய்ய? இந்த கேள்விக்கு ஒரு நண்பன் சொன்னான். இவன் ஏதோ அண்ணாச்சி. இங்கேயே கிடக்கட்டும்.

அவர் சட்டைப் பையில் குப்பைக் கூடையில் கிடக்கும் காகிதம் போல பணம் கசங்கிக் கிடந்தது. இப்படியே விட்டுவிட்டு போவதும் சரியில்லை என்று தோன்றியது.

நாங்கள் ஆறு பேர் இருந்தோம். யாராவது ஒருவர் அவர் வீட்டில் கொண்டுபோய் விடலாம் என்று முடிவானது. அந்த ஒருவர் யாரென்றால் நான்தான். அதற்கு காரணம் இருந்தது. அந்த கூட்டத்தில் எனக்கு மட்டும்தான் புல்லட் ஓட்டத் தெரியும்.

முகவரி விசாரிக்க, தடுமாற்றத்தோடு சொன்னார். அது இரண்டு தெரு தள்ளிதான் இருந்தது. நண்பர்களில் ஒருவன் தம்மடித்துவிட்டு வந்து என்னை பிக்கப் பண்ணிக் கொள்வதாக சொன்னான். நாங்கள் புறப்பட்டோம். அவர் ஒரு குழந்தையைப் போல என் முதுகில் சாய்ந்து கிடந்தார். குழந்தை வாந்தி எடுத்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு.

அவர் முனங்கிய கதவு எண் முன்னால் நின்றபோது... என்னால் நம்ப முடியவில்லை. அது அவர் வீடாக, மன்னிக்கவும்... பங்களாவாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.  அவர் வருகைக்காக எந்த விளக்கும் அங்கே எரிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால்... காவலாளி ஓடி வந்து அவரைத் தாங்கிக் கொண்டான்.

அந்த தடுமாற்றத்திலும் “நானை நீ என்னைப் பார்க்க வரவேண்டும்“ என்று சொன்னார். அந்த குரலில் ஒரு நட்பின் வேண்டுகோள் இருந்தது. அதனால்...

மறுநாள் மாலை அவர் முன்னால் நான் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு நீண்ட உரையாடல். அவர் மெட்ராசுக்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய கதையைச் சொன்னார். அது பல பணக்காரர்களின் கதை என்பதால், அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இருவருமே விடைபெற விரும்பினோம்.

அவர் பர்சை எடுத்து விரித்தார். அதில் பத்து ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அடுக்கப்பட்டிருந்தது. எந்த நோட்டை எடுப்பதென்று மனம் தடுமாறியதை, அவர் விரல்கள் காண்பித்தது.

கடைசியா 500 ரூபாயை எடுத்து என்னிடம் நீட்டினார்.

நான் புன்னகைத்தேன். அது ஏன் என்று புரியாமல் பார்த்தார்.

‘நீங்கள் கோடீஸ்வரனாக இருந்தாலும்... மனதில் இன்னும் ஏழையாகவே இருக்கிறீர்கள். உங்களைவிட நான் பணக்காரன்.‘ என்று என் மனதில் தோன்றியதை அவரிடம் எப்படிச் சொல்ல முடியும்?

நான் வேண்டாம் என்று தலையசைத்துவிட்டு எழுந்த போது, அவர் சலிப்பாக சொன்னார். “தம்பி, ஏழையின் குழந்தைகள் தகப்பனை நேசிக்கிறார்கள். பணக்காரனின் குழந்தைகள், அவன் பணத்தை நேசிக்கிறார்கள்.

நான் எதுவும் சொல்லவில்லை. புரிந்ததாக தலையசைத்துவிடு வெளியே நடந்தேன்.

அவர் கையிலிருந்த பணத்தில் காந்தி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

அந்த ஏழை மனிதன் யார் என்று நீங்கள் தேட வேண்டாம். அவரைப் போல நிறையபேர் இருக்கிறார்கள்.

Monday, 30 September 2013

பேசலாம் வாருங்கள்


இனிய நண்பர்களே...

எனக்கு உங்கள் முகம் தெரியாது., பெயர் தெரியாது. நண்பனுக்கு ஒரு முகமும் பெயரும் தேவைதான். ஆனால்... நட்பு என்ற உணர்வுக்குத் தேவையில்லை. அந்த உணர்வோடு உங்களிடம் பேச வருகிறேன்.

ஒரு புகைப்படம் உங்கள் வாழ்வை சொல்லக் கூடும். அதனால்... கேமராவின் முன்னிருந்து விலகிச் செல்லாமலிருப்பது சிறப்பு.

நீங்கள் டீ குடிக்கும் நேரத்தில், உணவுக்கு காத்திருக்கும் நேரத்தில் அல்லது பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் நாம் பேசிக்கொள்ளலாம். என்னோடு பேச நீங்கள் நேரம் ஒதுக்கினாலும் மகிழ்ச்சிதான்.

நான் ஸ்நேகிதன்., புகைப்படக் கவிஞன். நான் என் கேமராவின் வழியாகப் பார்த்த மனிதர்கள், காட்சிகள், கவிதைகள், கதைகள் என்று எல்லாவற்றையும் உங்களோடு பேசப் போகிறேன். நீங்களும் பேசலாம்.

கேமராவுக்கு எதுவும் தெரியாது. அது நாம் சொல்வதைச் செய்கிறது., அவ்வளவுதான். ஒளியோடு பேசத் தெரிந்தவன் மட்டுமே சிறந்த புகைப்படக் கலைஞன். ஒளியின் மொழி, ஒளியில் ஒளிந்திருக்கிறது.

நாம் அறிந்த மனிதர்களைப் பற்றியே அறிந்து கொள்ள விரும்புகிறோம். அறியாத மனிதர்களிடமும் கதை இருக்கிறது. அவர்கள் எழுதுவதில்லை. அதனால்... யாரும் அறிந்துகொள்ள முடிவதில்லை.

மனிதனாக பிறந்துவிட்டாலே அவனோடு கதையும் பிறக்கிறது. அவனும் ஒரு எழுத்தாளன்தான். ஒவ்வொரு மனிதனிடமும் எண்ணற்ற கதைகள் நிறைந்து கிடக்கிறது. ஒரு சிலர் எழுதுகிறார்கள். பலர் எழுதப்படாத கதைகளை சுமந்து திரிகிறார்கள்.

நாம் கதைகளை இழந்து கொண்டிருக்கிறோம். அதை காப்பாற்றாத சமூகம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் இழக்கும். கதை கடந்து போனவைகளைச் சொல்கிறது. நடந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால்... அது நடக்கப் போவதையும் சொல்கிறது. முன்னோர்களின் கதையறியாத குடும்பம் கௌவரவத்தை அறிந்து கொள்வதில்லை.

கதை மனிதர்களை இணைக்கிறது., நண்பர்களாக்குகிறது. அவர்களும் கதையாக மாறுகிறார்கள். நாமும் ஒரு கதையாக மாறலாம்.

அன்புடன் ஸ்நேகிதன்