Friday, 25 September 2015

மரணத்தின் நிறம்


மரணம் எப்போதும் தன்னை மர்மமாகத்தான் வைத்திருக்கிறது. அது எப்போது யாரை அழைத்துச் செல்லும் என்று யாருக்கும் தெரியாது. அது தெரிந்துவிட்டால், இந்த வாழ்கைக்கு எந்த சுவையும் இல்லை.

மரணத்தின் நிறம் என்ன? என்ற என் கேள்விக்கு கருப்பு, மஞ்சள், சிகப்பு, பிங்க் என்று நண்பர்கள் சொல்லிக்கொண்டே போனார்கள். அவர்கள் இன்னும் மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்பாதவர்கள். தொட்டுத் திரும்பியவர்கள்தான் உண்மையைச் சொல்ல முடியும். ஆனாலும்… மரணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிறமாக தோற்றம் அளிக்கக் கூடியதாக இருந்தால், அந்த உண்மையான நிறத்தையும் வெளியே சொல்ல முடியாது.

எப்படி இருந்தாலும்… நான் பார்த்த மரணம் வெள்ளை நிறமாக இருந்தது.

மழை லேசாக பெய்துகொண்டிருந்தது. கார் கன்னியாகுமரியிலிருந்து ஐந்து கிராமம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது. நாங்கள் மூன்று பேர், உள்ளே சந்தோஷத்தின் எல்லையில் சிரித்துக்கொண்டிருந்தோம். நாளை எங்கள் மூவருக்குமே வெவ்வேறு வேலைகள் இருந்தது. ஆறுமுகத்திற்கு அவன் அப்பாவை மருத்துவமனை அழைத்துச் செல்லவேண்டும். பத்திரனுக்கு வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும். எனக்கு என் தோழியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

காருக்கு அடியிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. எங்கள் சிரிப்பு அடங்கிற்று. கார் காற்றில் பறந்து விழுந்தது. பிறகு துள்ளி மீண்டும் பறந்தது. மீண்டும் விழுந்தது. மறுபடியும் துள்ளி காற்றில் பறந்தது. அடுத்து விழுந்தது எனக்கு ஞாபகம் இல்லை.

நான் வெள்ளை நிற, வெளிச்சத்தின் உள்ளே செல்கிறேன். அங்கே அடையாளம் காணும்படி எதுவும் இல்லை. எல்லா பக்கமும் வெளிச்சமாகவே இருந்தது. நான் போய்கொண்டே இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கை குறித்தோ, வந்த நண்பர்கள் குறித்தோ எந்த ஞாபகமும் இல்லை. மனம் எந்த உணர்வும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. எனக்கு இன்னும் உள்ளே போக வேண்டும் என்று தோன்றியது.

“ஸ்நேகிதன்… ஸ்நேகிதன்…” என்று யாரோ என் தோளைத் தொட்டு அசைத்தார்கள்.

நான் திரும்பிப் பார்த்தேன். பத்திரன் என் தோளை அசைத்துக்கொண்டிருந்தான். நான் காரிலிருந்து இறங்கினேன். என் கால்களில் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தேன். இந்த உலகம் எனக்குப் புதியதாக இருந்தது. என்னோடு வந்த இருவரும் ஏதோ புரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள். நான் மூன்று நிமிடங்கள் சுயநினைவில்லாமல் இருந்ததாக பத்திரன் சொன்னான்.

கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த இடம் பழவூர் சந்திப்பு என்று சொன்னார்கள். காரின் கீழ் பகுதி நொறுங்கிப்போயிருந்தது. இனி கார் எதற்கும் உதவாது.

இந்த விபத்திற்குப் பிறகு, பல மாதங்களாக நான் யாரோடும் பேசவில்லை. சூன்யம் என்பதன் பொருள் என்ன என்பதை என்னால் உணர முடிந்தது. அதனால்… வாழ்க்கையையும் புரிந்துகொள்ள முடிந்தது. என் மீது பகை கொண்ட நண்பர்கள்., நான் பகை வைத்திருக்கும் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் போனார்கள். உடைந்துபோன என் ஃபோனை எடுத்து பேச முடியாததால், என் தம்பி ஒருவன் ‘இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’ என்றான். அதற்கு நான் ‘சரி’ என்று பதிலளித்தேன்.

மரணத்தின் வெள்ளை நிறத்தை பார்க்காதவரைதான் இந்த உயிரும், பணமும், வீடும், பெண்ணும், புகழும் நம்முடையது. பார்த்தாகிவிட்டால் இங்கே எதுவுமே நம்முடையதல்ல.

பழவூர் சந்திப்பில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், அங்கே மனிதர்களின் உயிரைக் குடிக்க நீலி ஒருத்தி நிற்பதாகவும் பலர் சொன்னார்கள்.

அதையெல்லாம் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, இன்னொரு சந்தர்ப்பத்தில் அங்கே காத்திருக்கும் பழவூர் நீலியின் கதையை உங்களுக்கு சொல்கிறேன். அது நீங்கள் பார்க்காத ஒரு சினிமாவாக இருக்கும்.