Saturday, 19 October 2013

புதிதாக பிறக்கலாம்

குணா
நான் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்குள் நுழைந்த நேரம், நண்பர் குணா யாரிடமோ செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அது மிகவும் முக்கியமான உரையாடல் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. என்னிடம் கையசைத்து காத்திருக்குமாறு சொன்னார்.

நான் அமைதியாக உட்கார்ந்தேன்.

அவர் செல்ஃபோனில் சொன்னார். நீ ஒரு காரியம் செய். நேராக ஒரு துணிக் கடைக்குப் போ. அங்க ஒரு காவி வேட்டியும், சட்டையும் வாங்கிக்க. அதை அங்கயே மாத்திட்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போ. அங்க வடநாட்டுக்கு என்ன டிரையின் போகுதோ... அதுல ஏறி உட்கார்.

நான் ஒன்றும் புரியாமல் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்.

“டிரையின் போகப் போக நீ வாழ்ந்த வாழ்க்கையும், இனி எப்படி வாழப் போறோம்ங்ற கேள்வியும் உன்னை சுத்தியே வரும். நீ உன்னோட செல்ஃபோனை தூக்கி வெளிய எறி.

எனக்கு குணாவின் உரையாடல் புரியாவிட்டாலும், ஒரே வினாடியில் சுவாரசியமானது. கவனித்தேன்.

“அப்புறம்... உன்னிடம் இருக்ற பணத்தையெல்லாம் எடு. அதையும் வெளிய வீசியெறி. எப்போ உங்கிட்ட பணமில்லையோ, அப்பவே நீ செத்துப் போயிட்ட.

நான் குணாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் லேசாக புன்னகைத்தார். ஆனாலும்... அவர் பேச்சில் ஒரு ஆழமான கவனம் இருந்தது. நான் அவசரமாக செல்ல வேண்டும். ஆனாலும்.. அவர் பேச்சின் சுவாரசியத்தில் அப்படியே இருந்தேன்.

“டிரையின் கடைசியா எந்த ஊர்ல நிக்குதோ, அங்க இறங்கு. உன்கிட்ட பணமில்ல, மாத்து துணி இல்ல, படுக்க இடமில்ல, சொந்தம் இல்ல, நண்பர்கள் இல்ல. அங்கயே அலைஞ்சி திரி. அப்போ உனக்கு மனுஷங்க யார்னு தெரியும். நீ யார்னு புரியும். ஒரு வருஷம் கழிச்சி இங்க வா. அப்போ நீ ஒரு சரியான வாழ்க்கைய வாழலாம். அது உன்னோட ரெண்டாவது பிறப்பு. அந்த வாழ்க்கை உனக்கு புதுசா இருக்கும். என்னைத் தேடி ஒரு நண்பர் வந்திருக்றார். அவரை அனுப்பிட்டு கூப்பிடுறேன். அதுவரை எதுவும் செய்யாத. காத்திரு.என்று தற்காலிகமாக பேச்சை முடித்துவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தார்.

இருவரும் டீக் கடைக்கு வந்தோம். டீயைக் குடித்துக் கொண்டே “என் திரைப்படத்திற்கான தலைப்பை ஒருவன் திருடி ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறான். அவனிடமிருந்து அதை எப்படி வாங்குவது. என்று கேட்டேன். அவர் சில விஷயங்களைச் சொன்னார். ஆனால்.. அவர் கவனம் என்னிடம் இல்லை. அவர் பார்வை அடிக்கடி செல்ஃபோனுக்கு சென்று கொண்டிருந்தது.

“எதாவது சிக்கலா?என்று கேட்டேன். அவர் “இல்லை.என்று துவங்கி, இருந்ததை லேசான புன்னகைக் கலந்து சொன்னார். எனக்கு பகீர் என்று இருந்தது. நான் வேகமாக விடை பெற்றுக் கொண்டேன்.

அவர் வேகமாக செல்ஃபோனை காதில் வைத்தபடி போனார்.

நான் சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன். ரோட்டைப் பார்த்தேன். உயிர் வாழ்வதற்காக எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்... குணாவின் நண்பன் தற்கொலை செய்வதற்காக காத்திருக்கிறான்.

இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் அவன், கடைசியாக குணாவிடம் பேசிவிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்றிருந்திருக்கிறான். அப்போதுதான் நான் உள்ளே நுழைந்திருக்கிறேன். குணா அவன் மனதை எப்படியும் மாற்றிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. சினிமா அதை அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தது. ஆனால்... வாழ்க்கை சினிமா அல்ல.

தற்கொலை செய்வதை விட, புதிதாக பிறப்பது அழகானது. ஆனால்... கடினமானது. அந்த நண்பன் புதிதாக பிறக்க சம்மதித்தானா என்று இனிதான் குணாவிடம் கேட்க வேண்டும்.