Saturday, 26 October 2013

மொழியறியாத வீடு


குழந்தைகளிருக்கும் வீட்டில்
பொம்மைகளும் வசிக்கத் துவங்கிவிடுகின்றன.

கைவிடுதலும்
புறந்தள்ளுதலும்
புகார் சொல்லுதலும்
பொம்மைகளிடம் இல்லை.

பேசுபவர்களோடு ஒருபோதும்
பேசுவதில்லை பொம்மைகள்.

பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள்
பொம்மைகள் என்ன பேசிக்கொள்ளும்
என்பதை அறியாமலேயே
கதவு திறக்கப்படுகிறது.

மௌனத்தின் மொழியறியாத வீடு
வார்த்தைகளால் மூழ்கிக் கிடக்கிறது.

குழந்தைகளின் அழுகையை
நிறுத்தும் பொம்மைகள்
தன் அழுகையை
மௌனத்தில் மறைத்துக் கொள்கிறது.

குழந்தைகளின் மாற்றம்
குப்பைத் தொட்டியை
பொம்மைகளின் வீடாக மாற்றுகிறது.

பொம்மைகள் அறிவதில்லை
தன் வாழ்நாளை.

குழந்தைகளின் மனதில்
மறைந்திருக்கிறது
பொம்மைகளின் ஆயுள்.
- ஸ்நேகிதன்