யாரையும் எல்லையை நோக்கி அழைத்துச்
செல்லாதீர்கள். அதற்கு அப்பால் உண்மை இருக்கிறது. உண்மை
ஆபத்தானது.
உங்களுக்கு சிறந்த நண்பன் இருக்கலாம்., காதலி இருக்கலாம்., மனைவி
இருக்கலாம்., பெற்றோர் இருக்கலாம்., குழந்தைகள் இருக்கலாம். யாராக
இருந்தாலும் எல்லையை நோக்கி அழைத்துச் செல்லாதீர்கள். நீங்கள் உண்மையானவர் என்றால்...
நொறுங்கிப் போவீர்கள்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாம்பேயில்
எனக்கொரு காதலி இருந்தாள். அவள் அழகானவள்., அமைதியானவள்., ஏன் உண்மையானவளும்
கூட.
ஒரு மாலையில் நான் அவளைப் பார்ப்பதற்காக சர்ச்
கேட் போய் இறங்கினேன். அப்போது சில பெண்கள் அவளிடமிருந்து விடை பெற்றுக்
கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்களை நான் புகைப்படம் எடுக்கச்
சென்ற பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களைக் குறித்து எனக்கு எந்த
மரியாதையும் இல்லை. அதற்குப் பல மோசமான காரணங்கள் இருந்தது.
"அவர்களோடு உனக்கு நட்பு வேண்டாம்."
என்றேன் என் காதலியிடம்.
அதற்கு அவள் ஏதேதோ கருத்துக்களையும், காரணங்களையும் சொன்னாள்.
கடைசியாக அவர்கள் நட்பைத் துண்டிக்க கால அவகாசம் கேட்டாள். நான்
குழப்பமடைந்த இடம் இங்குதான். அவளுக்கு யார் முக்கியம்? என்ற கேள்வி தோன்றியது.
நாட்கள் நகர்ந்தது.
மட்டுங்கா ரயில் நிலையம் - என் காதலியோடு அவர்கள் பேசிக்
கொண்டிருப்பதை மீண்டும் பார்த்தேன். என் காதலிக்கு யார் முக்கியம்?
"உனக்கு யார் முக்கியம்? நானா? உன் தோழிகளா?" என்று கேட்டேன்.
"நீங்கள்தான்." என்றாள்.
"அப்படியென்றால் அவர்கள் நட்பை
விட்டு விடு."
"எனக்கு அவகாசம் வேண்டும்." இரண்டாவது முறையாக கேட்டாள். சில நேரங்களில்... ஒரு வினாடியில்
எடுக்கப்படாத முடிவு, எப்போதுமே முடிவடையாது.
சொல்லாலும் செயலாலும் பின்னப்பட்டது வாழ்க்கை. சொல்லும்
செயலும் ஒன்றாக இருப்பது உண்மை. சொல் வேறும், செயல் வேறுமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் அவளை எல்லைக்கு அப்பால் அழைத்துச் செல்ல முடிவு
செய்தேன்.
தினமும் அவளிடம் "உன் தோழிகளை விட்டு
எப்போது விலகுவாய்?" என்று கேட்க ஆரம்பித்தேன். தினம் ஒரு சண்டை. சண்டைக்கு நடுவே அவளை மெதுவாக
எல்லையை நோக்கி அழைத்துச் சென்றேன்.
அவள் பாதி வழியில் நின்றுகொண்டாள். அதற்கு மேல் வரவில்லை.
என்னோடு பேசுவதை குறைத்துக் கொண்டாள்.
எனக்கு புரிந்து போயிற்று. முக்கியமானது இருக்கும்., முக்கியமில்லாதது
காணாமல் போகும். இங்கே காணாமல் போகப் போவது நானா? அவள் தோழிகளா?
ஒரு நடுப் பகலில் கடைசி சண்டை நிகழ்ந்தது.
மறுநாள் அவள் வீட்டில்தான் இருந்தாள் என்பதை நான் அறிவேன். தொலைபேசியில்
அழைத்தேன். அவள் எடுக்கவில்லை. இனி என் அழைப்பை ஏற்றுக்கொள்ள
மாட்டாள் என்று உள் மனம் சொல்லிற்று.
ஆனாலும்... கடைசியாக அந்த பொய்யான குரலைக் கேட்க விரும்பினேன். என் அழைப்பு அவள் வீட்டு தொலைபேசியில் ஒலித்துக்
கொண்டிருந்தது...
அடுத்த வாரம்...
