ஒரு வார்த்தை அதன் அழகை பொருளில் வைத்திருக்கிறது. ஒரு பெண் தன்னை வைத்திருப்பது
போல. தத்துவம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு... ‘பெரும்பான்மையான மக்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தே தத்துவம்.‘ இதுவே பதில்.
தத்துவம் தோற்கும் போது, வார்த்தை தொலைந்து போகிறது. ‘நல்லவன் வாழ்வான்.‘ என்ற
ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வந்தது. இப்போது அந்த தத்துவம் நம்பிக்கையை
இழந்துவிட்டது. அதனால்... நல்லவன் என்ற வார்த்தை தொலைந்துவிட்டது.
ஒரு வார்த்தையில்லாமல் அந்த தத்துவம் தவிக்க, அந்த இடத்தை கெட்டவன் என்ற
வார்த்தை ஆக்ரமித்துக் கொண்டது. ‘கெட்டவன் வாழ்வான்.‘ இதுதான் புதிய தத்துவம்.
மனிதர்களின் சூழல் மாறும் போது, வாழ்வு மாறுகிறது. அதோடு வார்த்தையும்
மாறிவிடுகிறது. ஆதியில் பத்திரம் எழுதும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. “இந்த இடம் உனக்கு. பத்து பணம் தா.” என்று விற்பனை நடந்திருக்கும்.
கொடுக்க வேண்டியவன், பணத்தை தந்துவிட்டேன் என்று
வார்த்தையை மாற்றியிருப்பான். அதனால்... சாட்சி என்று ஒருவரை
உருவாக்கியிருப்பார்கள். பிறகு... வார்த்தை கொடுத்தவனும் சாட்சியும் சேர்ந்து
வார்த்தையை மாற்றியிருப்பார்கள்.
இனி... மனிதர்களின் வாய் வார்த்தையை நம்புவதற்கில்லை
என்ற முடிவில், வார்த்தையை எழுத்துப் பூர்வமாக்கி, காகிதத்தில்
எழுதியிருப்பார்கள். முடிவில் மனிதனின் வார்த்தையை விட, எழுத்து நம்பிக்கையை
பெற்றுவிட்டது. இது மனிதனுக்கு அவமானமான ஒன்று என்பதை ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும். எப்படியாக இருந்தாலும், வார்த்தை தொலையும் போது வாழ்க்கை தன் முகத்தை
மாற்றிக்கொள்கிறது.
உயிர் வாழ்வதற்காக வாக்கை கைவிடும் மனிதன், தன்
வார்த்தையை தொலைத்துவிடுகிறான். மனிதன் மட்டுமல்ல ஒரு அரசாங்கம், நிறுவனம்,
அமைப்பு, மதம், கட்சிகள் எல்லாமும் இதைச் செய்கின்றன.
‘பூஷ்வா‘ என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளால்
உச்சரிக்கப்பட்டு வந்தது. அது இப்போது தொலைந்துவிட்டது. ஒருவேளை நாம் எல்லோருமே
பூஷ்வாவாக மாறிவிட்டதால் அந்த வார்த்தை தொலைந்துவிட்டதோ என்னவோ.
அம்மா, மம்மியாக மாறியதில் அம்மாக்களுக்கு சந்தோஷம்தான்.
பீட்சா சாப்பிடாத மம்மி எப்படி மம்மியாக முடியும்? அம்மா என்ற ஒரு வார்த்தை நம் மனதில் எத்தனையோ
உணர்வுகளைத் தருகிறது.
அன்பு, தியாகம், பாசம், ப்ரியம், ஸ்பரிசம், தேடல், மரியாதை,
முத்தம் இப்படி எல்லா வார்த்தைகளையும், அதன் பொருளையும் நாம் அம்மாவிடமிருந்தே
அறிந்தோம். அம்மா என்ற வார்த்தை தொலையும் போது, அதன் பொருளும் தொலையும். அதை மம்மி
என்ற வார்த்தை எப்படி மீட்டெடுக்கும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அதில் நம்
கலாச்சாரம் இருக்குமா? இந்த கேள்விகளுக்கு பதில் என்னவென்று தெரியவில்லை.
மக்கள் தொகையை குறைக்க நினைத்த அரசு ‘சிறு குடும்பம்
போதுமே‘ என்று பிரச்சாரம் பண்ணியது. பிறகு ‘நாம் இருவர். நமக்கு இருவர்‘ என்றது.
இப்போது ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்.‘ என்று சொல்கிறது. இனி... என்ன சொல்லும்?
‘உனக்கு நானும், எனக்கு நீயும் குழந்தைகள். அதனால்
குழந்தை வேண்டாம்.’ என்று சொல்லுமா?
ஒரு கருத்தை உருவாக்கும் போது, அது எவ்வளவு ஆண்டுகள்
உயிர்வாழும் என்ற தொலைநோக்கு சிந்தனை வேண்டாமா? பணத்திற்காக மட்டுமே வேலை
செய்பவர்களால் உண்மையாக சிந்திக்க முடியாதுதான்.
நாம் எவ்வளவோ வார்த்தைகளைத் தொலைத்துவிட்டோம். இப்போது
நாம் தொலைக்கக் கூடாத ஆங்கில வார்த்தை ஒன்று இருக்கிறது. ஆனால்... அது
தொலைந்துகொண்டிருக்கிறது. அந்த வார்த்தை Made in India.
