Saturday, 23 November 2013

திரும்பாத இரவுகள்


முன் கதவு திறந்திருக்கிறது
பின் கதவை பயன்படுத்த வேண்டாம்.

நண்பர்கள் போல
திருடர்கள் வருவதை
அனுமதிக்க முடியாது.

பிச்சைக்காரர்களுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும்
மேஜை மீது உணவிருக்கிறது.

மது அருந்துபவர்களுக்கு
குவளையில் சாராயமும்
இரண்டு கோப்பைகளும் இருக்கின்றன.

இளைப்பாற கட்டிலும் மெத்தையும்
மூலையில் கிடக்கின்றன.

சுவரிலிருக்கும் மனிதனை
இகழாதவரை
உறவுக்கு உத்திரவாதமுண்டு.

இரத்தக் கறை படிந்த புன்னகையை
மறக்காமல் எடுத்துக் கொண்டு
இரவு வருவதற்கு முன்
விடை பெறுங்கள்.

வீட்டைப் பூட்ட வேண்டும்.
                               - ஸ்நேகிதன்

Sunday, 17 November 2013

பார்வைகள்




அவனால் என்னை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. தலை குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களுக்கு நடுவே இரண்டு யூஸ் அண்ட் த்ரோ கப்புகளில் மது நிறைந்திருந்தது.

அவனுக்கும் குடிக்க மனதில்லை., எனக்கும். எதை வைத்து அவன் அப்படிச் சொன்னான் என்று என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. நான் என்னை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடலாம். ஆனால்... சமூகமும் அப்படியே மதிப்பிட வேண்டிய காட்டாமில்லை. அது வேறு மாதிரியான மதிப்பீட்டை வைத்திருக்கும்.

பல நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் இந்த சமூகம் மதிப்பீடு செய்துகொள்கிறது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால்... இந்த சமூகத்திற்காக நாம் சிறந்த நடிகர்களாக மாறியாக வேண்டும்.

நான் யூஸ் அண்ட் த்ரோ கப்பிலிருந்த மதுவை காலி செய்தேன். அவனுக்கு இன்னும் என்னை நேருக்கு நேர் பார்க்கும் துணிவு வரவில்லை. மூன்று நிமிடங்களுக்கு முன், "நீ ஒரு காரியவாதி." என்று அவன் என்னை பார்த்துச் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதுக்குள் மோதிக்கொண்டே இருந்தது. நீண்ட ஆண்டுகள் பழகிய நண்பனே இப்படி ஒரு வார்த்தையைச் சொன்னான் என்றால்... இந்த சமூகம்?

"என்னப் பாரு." என்றேன்.

சில வினாடிகள் அவன் என்னைப் பார்க்கத் துணியவில்லை. பிறகு மெதுவாக தடுமாறும் கண்களோடு பார்த்தான்.

"உனக்குத் தெரியும் நான் அமைதியான ஆள் இல்லன்னு. அடுத்தவன் பிரச்சனைக்கு போயிப் போயியே என் வாழ்க்கய தொலைச்சிட்டேன். இப்ப காலம் அமைதியா இருக்க கத்துக் குடுத்துருக்கு. அமைதியா இருக்கிறேன். அமைதியா இருக்றவன் காரியவாதின்னா... அப்படியே இருந்துட்டு போட்டும்."

அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. மீண்டும் குனிந்து கொண்டான்.

"எங்கிட்ட பொண்டாட்டி இல்ல, குழந்தை இல்ல, சொந்த வீடு இல்ல, கார் இல்ல, பேங்ல பணமில்ல, ஏன்? சொல்லிக்ற மாதிரி வேலை கூட இல்ல. இதெல்லாம் வச்சிருக்ற நீ காரியவாதியா? நான் காரியவாதியா?" என்று கேட்டேன்.

அவன் அதற்கும் அமைதியாக இருந்தான். அமைதியை சிலர் இயல்பாக வைத்திருப்பார்கள். அவன் பதில் சொல்ல முடியாததால் வைத்திருந்தான். அடுத்த வினாடியே, அந்த இடத்தை விட்டு போகவேண்டும் போலிருந்தது. எனக்காக காத்திருந்த மதுக் கப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

நடு இரவில் சென்னையின் தெரு அமைதியாக இருந்தது.

குடும்பத்திற்காக குடும்பத்திலிருந்து பிறக்கிறது குற்றம். அதில்தான் இந்த சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மாறி நிற்பவன் துணிச்சலானவன். துணிவில்லாதவர்களால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கப்பை காலி செய்து கசக்கி தூக்கியெறிந்தேன். யூஸ் அண்ட் த்ரோ கப் போய் மண்ணில் விழுந்தது.

Saturday, 9 November 2013

அதிக நேரமில்லை


பாம்பே - அது 1993 ஆம் ஆண்டு முதல் மாதத்தின், கடைசி நாளின் நடு இரவாக இருந்தது.

நான் அறைக்குள் நுழைந்த நேரம், அவள் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். மங்கிய வெளிச்சத்தில் நாற்பத்தைந்து வயதுதானிருக்கும் என்று தோன்றியது. மேல்தட்டு வர்க்கத்தின் அழகு அவளிடம் இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக அவள் தூங்கவில்லையென்பது அந்த வெண்ணிற முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அந்த அறையின் நிசப்தம் அவளை நிலை குலையச் செய்திருந்தது.

என் முகத்தை ஒரே ஒரு முறை நேருக்கு நேராக பார்த்தாள். பிறகு சுவரை பார்க்கத் துவங்கினாள். நான் மேஜை மேலிருந்த ஃபைலை எடுத்துப் பார்த்தேன் - அதிர்ச்சியானேன். ஆனால்... வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உணர்வுகளை வெளியே காட்டக் கூடாது என்பதுதான் எங்கள் முக்கியமான பாடம். அவள் தோற்றத்திற்கும், செய்த செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமலிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் அவளைப் பற்றிய தகவலை எண்களாக சிலேட்டில் எழுதினேன்.

அவளை சுவர் ஓரமாக, அளவு கோல் வரையப்பட்டிருந்த இடத்தில் வந்து நிற்கச் சொன்னேன். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கூட அவளிடமில்லை. அமைதியாக வந்து நின்றாள். சிலேட்டை அவளிடம் நீட்ட, எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். ஆனால்... அவள் கண்களில் 'இது எதற்கு?' என்ற கேள்வி தோன்றியது. ஆனால்... கேட்கவில்லை.

நான் அவளை மூன்று புகைப்படங்கள் எடுத்தேன். அந்த நடு இரவில் என் கேமராவின் ஷட்டர் சத்தமும், வெளிச்சம் சிதறி பிளாஷ் சக்தியை உருஞ்சும் சத்தமும் துல்லியமாக கேட்டது. அவள் எந்த உணர்ச்சியையும் கேமராவுக்கு காட்டவில்லை. ஆனால்... அவள் மௌனம், அந்த இரவை துன்புறுத்துவதாக இருந்தது.

அவள் உடலும், மனமும் தளர்ச்சியாக இருந்ததால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்.

வாசலில் ஏதோ அசைவு தெரிந்தது. நான் திரும்பிப் பார்க்க, கோக்டே நின்று கொண்டிருந்தார். "டைம் நகி ஹே. ஓஹயா க்யா?"

நான் ஆமாம் என்று தலையசைத்தேன். அவர் அவளை கட்டளையோடு கையசைத்து அழைத்தார். அவள் இப்போதும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் எழுந்தாள்., போகும் போது என் தலை முடியை கோதிவிட்டபடி, ஒரு கடினமான புன்னகையை தந்துவிட்டு போனாள்.

எனக்கு பட்டென்று என் அம்மாவின் ஞாபகம் வந்தது.

நான் ஃபைலில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அன்டாப் ஹில் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். இரண்டு காவலர்கள் ஒருவனை அடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனார்கள்.

அவள் முகம் என் மனதைவிட்டு விலகாமல் கூடவே வந்துகொண்டிருந்தது. அவள் தன் கணவனை ஆறு இடங்களில் கொடூரமாக குத்திக் கொன்றாள் என்று முதல் தகவல் அறிக்கை சொல்லியது. முதல் குத்தில், கத்தி விலா எலும்பின் இடிவெளியில் நுழைந்து, இதயத்தை துளைத்திருக்கிறது. மரணம் அந்த நிமிடமே நிகழ்ந்திருக்கலாம். பிறகு அவள், ஐந்து இடங்களில் பிணத்தைக் குத்தியிருக்கிறாள். அது சாதாரண கத்தியால் செய்ய முடியாது என்ற அனுமானங்கள் இருந்தது. ஏழாவது மாடியிலிருந்து கத்தியை வீசியிருக்கிறாள். அது இன்னும் கிடைக்கவில்லை. விலா எலும்பைக் கடந்து சாதாரணமாக கத்தி உள்ளே நுழைந்து விடாது. மட்டுமல்லாமல் ஒரு பெண்ணால் அது சாத்தியமா? இங்கே எப்படி நடந்தது? கணவனின் கொடூரம் அவளை கொடூரமாக மாற்றியிருக்கலாம். எப்படியோ... இன்று இரவு நடக்கப் போகும் விசாரணையில் எல்லா உண்மைகளும் தெரிய வரும். ஆனால்... உண்மைதான் வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.

அவள் முகத்தை நான் என் கேமராவில் பத்திரமாக எடுத்து வந்துகொண்டிருந்தேன். நாளை அவளை சந்திக்கும் போது, என் கேமராவிலிருக்கும் முகத்தைப் போல, அவள் முகம் இருக்காது என்பது எனக்குத் தெரியும். அது எனக்கு ஒருவித துக்கத்தை ஏற்படுத்தியது. நான் நிறைய குற்றவாளிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்படி ஒரு துக்கத்தை தந்துவிட்டு போனதில்லை. என்னிடம் அவள் ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அவள் என் கேசத்தை கோதிச் சென்ற ஸ்பரிசத்தை நான் இன்னும் சுமந்துகொண்டிருக்கிறேன்.

Saturday, 2 November 2013

ஏன் அப்படிச் செய்தாய்?

தினேஷ் குமார்
எப்படி சிரிக்கிறான் என்று பாருங்கள். இவன் பெயர் தினேஷ் குமார். நாகர்கோவில் நகரத்தில் இவனை நீங்கள் எங்காவது பார்க்க நேரலாம். எனக்குத் தெரிந்து, இவன் சுற்றித் திரியும் இடங்களைச் சொல்கிறேன். அது உங்களுக்கு உதவக் கூடும்.

செட்டிகுளம் ஜங்ஷன், வேப்ப மூடு ஜங்ஷன், மணிமேடை ஜங்ஷன். இந்த மூன்று இடங்களில், அனேகமாக நீங்கள் இவனைப் பார்க்கலாம். அப்படி பார்க்க நேர்ந்தால்... ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க வேண்டும். அந்தக் கேள்வி உங்களுக்கு கடினமாக இருக்காது என்றே நம்புகிறேன். அந்தக் கேள்வியைக் கேட்க நீங்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால்... இவன் என் குழந்தை பருவத்து நண்பன்.

'ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்க வேண்டும். எளிமையாகத்தானே இருக்கிறது?

இந்தக் கேள்வியை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால்... எனக்கு சரியான பதிலை இவன் தரவில்லை. உங்களுக்காவது தருகிறானா என்று பார்ப்போம்.

நாகர்கோவில். 1989 ல் ஏதோ ஒரு மாதம். அது எங்கள் இளமைக் காலம். இவன் அக்காவின் மாமனாருக்கு மாரடைப்பு. ஒரு பிரபல மருத்துவ மனையில் வைத்திருந்தார்கள். இவன் அங்கேயே தவமிருக்க, நானும் உடனிருந்தேன். அப்போதுதான் நான் அந்த தேவதையைப் பார்த்தேன். தேவதைகள் கருப்பாகவும் இருப்பார்கள் என்று அப்போதுதான் தெரிந்தது. வெண்ணிற உடையில் நர்சாக வந்துகொண்டிருந்தாள். முதல் பார்வையிலேயே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. என் அருகில் வந்தவள் ஒரு புன்னகையை வீசிவிட்டுப் போனாள். எனக்கு காய்சல் வந்துவிட்டது.

பிறகு வந்த நாட்களில் காதல் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்க ஆரம்பித்தது. பத்து நாட்களில், நாங்கள் பத்து வார்த்தைகள்தான் பேசியிருப்போம். நான் பாம்பே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், காதலைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது . மறுநாள் அவளிடம் என் காதலைச் சொல்ல காத்திருந்தேன்.

அவள் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது, அன்று அவளுக்கு விடுமுறை என்று. நான் சுமந்துகொண்டிருந்த வார்த்தைகளை என்ன செய்ய? ஒரு காகிதத்தில் எழுதி, கடிதமாக தினேஷ் குமாரிடம் குடுத்தேன். 'அவளிடம் எப்படியும் கொடுத்துவிடு' என்றேன்.

இவன் நம்பிக்கையாக 'குடுத்துவிடுவேன்' என்றான். அன்றே நான் பாம்பே புறப்பட்டேன். அங்கே ஒவ்வொரு நாளும் அவளிடமிருந்து கடிதம் வரும் வரும் என்று காத்திருந்தேன். வரவேயில்லை. நாட்கள் செல்லச் செல்ல என் காதலும் மங்கிப் போனது.

2009 ம் ஆண்டு. ஒரு சாயங்காலத்தில் நானும் இவனும், நாகர்கோவில் நேதாஜி ஸ்டோருக்கு முன்னால் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவளை மீண்டும் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது. அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கடந்து போனாள். முகத்தில் கொஞ்சம் கவலை படிந்திருந்தது. கழுத்தில் தாலி. தாலி கட்டிய தேவதையை பின் தொடர விரும்பாமல் நான் அப்படியே பார்த்தபடி இவனிடம் சொன்னேன். 'அவள் என் கடிதத்திற்கு பதில் எழுதியிருந்தால்... அவள் வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். என் வாழ்க்கையும்தான்.'

அதற்கு இவன் சாதாரணமாக 'நான் அந்த லெட்டர அவள்ட குடுக்கவே இல்லியே.' என்றான்.

நான் அதிர்ச்சியில் இவனையே பார்த்தேன்.

'அந்த லெட்டர் இன்னும் எங்கிட்ட பத்திரமா இருக்கு' என்றான்.

'நீ ஏன் அப்படி செய்தாய்?' என்று கேட்டேன்.

அதற்கு இவன் வரலாற்றில் யாருமே சொல்ல முடியாத ஒரு பதிலைச் சொன்னான். 'வா, டீ குடிக்கப் போலாம்.'

இன்னொருவனின் படிக்கப்படாத காதல் கடிதத்தை, இருபது வருடங்களாக பத்திரப்படுத்தி வைத்திருப்பவனை என்ன செய்வது? இப்போது கூட நான் அதிர்ச்சி மாறாமல்தான் இருக்கிறேன். நீங்கள் இவனை எங்காவது பார்த்தால் 'ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டுச் சொல்லுங்கள்.